திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பெற்ற காலகட்டத்தில், கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது, கொரோனா தடுப்புப் பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதுபோலவே மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட அளவிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாற்காலிகமாக, மூன்று முதல் ஆறு மாதம் ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
அதுமட்டுமில்லாது முதல் மற்றும் இரண்டாம் அலை சமயத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் செவிலியர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே ஆயிரக்கணக்காகச் செவிலியர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் எம்.ஆர்.பி அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் அவுட் சோர்சிங் அடிப்படையில் மாற்றம் செய்வதாகக் கூறப்பட்டது. இதனை எதிரித்தும், பணி நிரந்தரம் கோரியும் ஆயிரக்கணக்காகச் செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடச் செவிலியர்கள் சிலர் மயக்கமடைந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர். போராட்டம் எந்த முடிவும் எட்டாததால், மாலை ஏழு மணியளவில் போராட்டத்தில் ஈடுபட நான்கு ஆண் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதனால், செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு வரை தொடர்ந்த போராட்டத்தில் செவிலியர்களுடன் காவல்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வரும் திங்களன்று மருத்துவத்துறை அமைச்சர், மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகள் ஆகியோர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவதக்கவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போராட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்தனர்.
ஆனால் செவிலியர்கள், திடீரென மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் மீண்டும் பேசி போராட்டத்தைக் கைவிட வைத்தனர். கடைசியில் காவல்துறையினர் வாகனங்களை ஏற்பாடு செய்து செவிலியர்களை அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு பேருந்துகளிலும் 80 முதல் 100 செவிலியர்களை ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட நான்கு ஆண் செவிலியர்களை விடுவிப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.