• Wed. Apr 24th, 2024

இஸ்ரோ சாதனையின் மைல்கல் ‘எஸ்எஸ்எல்வி-டி2’ ராக்கெட்..!

Byவிஷா

Feb 11, 2023

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இஸ்ரோ சாதனையின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்வி-டி1 தோல்வியடைந்த நிலையில், முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி- டி2 ராக்கெட்டை வடிவமைத்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைகோளான இஓஎஸ்-07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 ஆகிய செயற்கை கோள்கையும் சுமந்து செல்கிறது.


இதில் 22.7 கிலோ எடை கொண்ட ஜானஸ் -1 அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் செயற்கை கோளாகும். அதேபோல் ஆசாதி சாட்- 2 செயற்கை கோளானது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். 34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டதாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி, மொத்தம் 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோ மீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் இது செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 900 வினாடிகள் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் பயணத்தில், முதலாவது இஓஎஸ்-07 சாட்டிலைட் 13 வது நிமிடத்தில் அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குள்ளான 3 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்பட்டதால், எஸ்.எஸ்.எல்.வி -டி2 ராக்கெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 30 நிமிடங்களில் இந்த செயற்கைகோள்கள் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுடன் திட, திரவ, வாயு என்று மூன்று நிலைகளில் எரிபொருட்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த எஸ்.எஸ்.எல்.வியில் மூன்று நிலையிலும் திட எரிபொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.வி வெற்றி என்பது இஸ்ரோவின் சாதனைகளில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. மிக சிறிய அளவிலான செயற்கைகோள்களை செலுத்துவதன் மூலமாக, உலக அரங்கில் பொருளாதார மற்றும் வணிக ரீதியான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு முன்னோட்டமாக அமையும் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *