தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்,ரமலான் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் தொடங்குகிறது.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய சட்டமன்றகூட்ட தொடர் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்புவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், 5-ம் தேதி போக்குவரத்து, சுற்றுலா, 6-ம் தேதி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7-ம் தேதி திட்டம், வளர்ச்சி, பொது, சிறப்பு திட்ட செயலாக்கம், நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.மே 9, 10-ம் தேதிகளில் உள்துறையின் கீழ் வரும் காவல், தீயணைப்புத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.
இதை முன்னிட்டு, நாளை முதல் நடைபெற உள்ள துறைகளின் அமைச்சர்கள், அலுவலர்களுடன் முதல்வர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
ரமலான் விடுமுறைக்கு பின் நாளை மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டம்
