கர்நாடக மாநிலம் காஜனூரில் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த பூர்வீக வீடு உள்ளது. சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதனை ராஜ்குமாரின் நினைவு இல்லாமாக மாற்ற வேண்டும், இங்கு அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் அந்த வீட்டை புனித் ராஜ்குமாரின் ஆசைப்படி நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளது. உள்ளூர் கிராமவாசிகள் மூலம் வீட்டை அதன் அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள், ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் விரைவில் கிராமத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகளை செய்து வரும் ராஜ்குமாரின் மருமகன் கோபால் கூறியதாவது: வீடு பரிதாபமாக இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. இது கன்னடர்களின் நினைவில் பதிந்திருக்கும் பொன்னான நினைவுகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமான தூண்கள் மற்றும் கூரை ஓடுகளை அப்படியே தக்க வைத்துக் கொள்கிறோம். வேலை முடிந்ததும், டாக்டர் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அரிய புகைப்படங்கள் இங்கு வைக்கப்படும். என்றார்.