பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து அணி தலைவி அனிதா பால்துரைக்கு தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அனிதா கார் வாங்குவதற்கு தமிழக பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: “மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைந்தது. அதை பின்பற்றி பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன.
ஆனால் திமுக, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. மக்களை முட்டாளாக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருப்பது உண்மையாகி விட்டது.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திர்கு பெட்ரோல், டீசல் விலையைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அவரே விலை உயர காரணம். தமிழக கடன் சுமை எவ்வளவு என்று தெரிந்து தான் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது, தமிழக அரசின் கடன் சுமை 5.10 லட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. ஒரு மாநிலம், அதன் மாநில மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் தான் கடன் வாங்க முடியும். இந்த அளவு அடுத்த ஆண்டு எட்டப்படும்.
இதே நிலை தொடர்ந்தால், 2023ல் அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இருக்காது. பாஜகவின் ஏழு ஆண்டு ஆட்சியில் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஊழல் இல்லாத மற்றும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்” என அவர் கூறினார்.