2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய போட்டிகள், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய உலக கோப்பை டி20 போட்டிகளின், தகுதி சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது.