கொரோனாவால், அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவுக்கு பின்னர் தான், இந்த நிலை உருவாகி உள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தாலும் அது அப்படி இல்லை என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று.
அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு கணக்கெடுப்பின் படி, குடும்பங்கள் கடன் வாங்குவது நகர்ப்புறங்களில் 42 விழுக்காடாகவும், கிராமப் புறங்களில் 84 விழுக்காடாகவும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடன்களில் சிக்கி தவிக்கும் இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 2012 முதல் 2018ஆம் ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் உள்ள குடும்பங்களே கடனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடன்களை திருப்பி செலுத்துவதற்கு போதிய விலைமதிப்பற்ற சொத்துக்கள் இவர்களிடம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆண்கள் தலைமையிலான குடும்பங்களை விட பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் குறைவாக கடன் வாங்கியுள்ளது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தென்மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் அதிக கடன் வைத்துள்ளதாகவும், அதில், விவசாய குடும்பங்கள் அதிக கடன்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுக்கடனின் பங்கு 60 விழுக்காட்டை தாண்டினால், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.