கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் மின்சார பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப தேவையான கட்டமைப்பு வசதிகளை தி.மு.க அரசு உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கையாளும் திறன் உள்ள நிலையில், தற்போது 5,000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை நம்பியே கடந்த தி.மு.க ஆட்சி பணியாற்றியிருப்பதை தவிர கூடுதலாக பணி மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் மேகதாது அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமைக் குரலை பிரதமரிடம் கடிதங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்திலும் கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், போதிய நீர் கிடைத்த பின்னரே திறக்க முடியும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எந்த முடிவையும் கூற முடியாது என்றார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து பனையூரில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றதாக கூறினார்.
சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆலயங்களுக்கு அனைவரும் செல்வது வழக்கமான ஒன்று என்றும், அதேபோல் விஜயும் சென்றுள்ளதாக கூறினார்.
மேலும், “சினிமா பிரபலங்கள் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுபவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் யார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்” என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
அதேபோல், மாணவிகளுக்கான “சிங்கப்பெண் படை” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதை படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




