பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படும் என்றும் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை தெரிவித்தது. கிராமப்புறங்களில் மாணவர்கள் அப்லோடு செய்யும் விடைத்தாள்கள் மோசமான இணையத்தொடர்பால் வந்து சேர தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கல்வித்தரத்தை பொறுத்தவரை சமரசமின்றி உயர்க்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.நிறைய மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தும் கொரோனா பேட்ஜா எனக் கேட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பின் பொறியியல் கல்லூரிகள் வரும் மார்ச் 7-ம் தேதி திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அதன்படி, 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெறும் என்றும், ஜூன் 22 -ம் தேதி நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.