பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணம், நேற்று நாமக்கல், குமாரபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
தமிழகத்தில் காவல்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறாக வழிநடத்துகிறார். கவர்னர் மாளிகை மீதே குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இருக்கிறது. தேச துரோகிகளும், தீவிரவாதிகளும் தமிழகத்தில் நடமாடுகிறார்கள் என்று பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதே மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ. அப்போதெல்லாம் தமிழகத்திற்கு இருண்ட காலம் தான். ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிறது. அனால் இன்னும் திமுக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
கடந்த 25ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வாசல் அருகில் உள்ள பேரிகார்ட் மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். அவரை சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. அவர் எங்கும் தப்பியோடவில்லை. ஆளுநர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்படவில்லை என தமிழக காவல்துறை சிசிடிவி காட்சிகளை காண்பித்து விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடதக்கது.