• Mon. Apr 29th, 2024

தேனி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

ByI.Sekar

Mar 4, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,077 பயனாளிகளுக்கு ரூ.9.72 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்கள். வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு விதமான சேவைகள் எளிதில் பெறுவதற்கு, தங்களது பகுதிகளின் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு அரசின் சார்பில் தற்பொழுது முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பிற திட்டங்களுக்கும், அத்தியாவசிய சான்றிதழ்களுக்கும் இணையவழியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதம் குறைக்கப்பட்டுள்ளது.
இணையவழியாக பட்டாக்கள் வழங்குவதன் மூலம் போலி பட்டாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வரைபடம், எப்எம்பி போன்ற வசதிகளும் இணையவழியில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளிலிருந்து இன்றுவரை 6000-க்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
பட்டா குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டத்தில் 60 நபர்களுக்கும், ஆண்டிபட்டி வட்டத்தில் 89 நபர்களுக்கும், உத்தமபாளையம் வட்டத்தில் 110 நபர்களுக்கும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 52 நபர்களுக்கும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 754 நபர்களுக்கும் என 1065 நபர்களுக்கு ரூ.9.61 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.96,011 மதிப்பிலான மூன்று சக்கர வாகனம் 12 நபர்களுக்கும் என மொத்தம் 1077 நபர்களுக்கு ரூ.9.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதவன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *