பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சிஐடியூ லாட்ஜ், ஹோட்டல், பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனசை பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், ஹோட்டல் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி சட்ட சலுகைகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். எட்டு மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும், கூடுதல் நேர வேலைக்கு அதற்கு தகுந்த ஊதியத்தை வழங்கிட வேண்டும், ஹோட்டல் தொழிலாளர்களுக்கு EPF மற்றும் பென்ஷனை அதிகப்படுத்திட வேண்டும், நலவாரிய பண பலன் கிடைப்பதற்கு உண்டான தடைகளை நிவர்த்தி செய்திட வேண்டும், swiggy zomato தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் மேலும் அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இச்சங்கத்தின் கோவை மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கைகளை தலைபாகைகளில் எழுதி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.