• Sat. May 17th, 2025

மும்மொழி கொள்கையை கூட்டணி ஏற்றுக்கொள்ளாது.,

மும்மொழித் திட்டம், புதிய கல்விக் கொள்கை, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் இன்று மாலை நடந்தது. முன்னதாக இந்த அமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,

மும்மொழித் திட்டத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்க விரும்பும் ஒன்றிய கல்வி அமைச்சரின் நிலைப்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருமித்தமாக எதிர்க்கிறோம். தேசியக் கல்விக் கொள்கையின் பெயரில் இந்தித் திணிப்பும், மாநில உரிமைகள் மீதான மத்திய அரசின் தலையீடும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2001-இன் படி 14 வயதுக்குள் உள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி அடையும் வரையிலான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்கு மாறாக, 2018-இல் பாஜக அரசு கொண்டுவந்த சட்டதிருத்தம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளி, தோல்வியடையும் ஆபத்துடன் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததை ஹிந்தியாக மாற்றும் நடவடிக்கையும் மத்திய அரசின் இந்தித் திணிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது என கூறினார்.

இதையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவேண்டும் என்ற கோரினார். இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சார்ந்த பிரச்சினையாக உள்ளது என்றார். முதலமைச்சர் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தினர்.

அத்துடன், பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் பள்ளி வேலை நாட்களாகவே கருதப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாகவும், இது பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

“நாங்கள் புதிதாக எதுவும் கேட்கவில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” என வலியுறுத்திய அவர் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு, அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தயார் என எச்சரிக்கை விடுத்தார்.