

12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று பா.ம.க.நிறுவனத் தலைவர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நீட் விலக்கு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமாக பங்களிக்கும்.தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. அதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
