• Fri. Mar 29th, 2024

பாஜக – அதிமுக உறவில் மீண்டும் சலசலப்பு

ByA.Tamilselvan

Mar 16, 2023

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி இன்று காலை மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பாஜக – அதிமுக உறவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக இடையே பிரச்னை ஏற்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவர் 6 மாத காலத்திற்கு நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்றிரவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக பாஜக மாநில தலைவர் ஒப்புதலுடன் அவர் அதே பதவியில் தொடருவார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக – அதிமுக உறவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *