
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து கட்டணத்தை ₹75 இலிருந்து ₹100 ஆகவும், மாணவர்களுக்கு ₹30 லிருந்து ₹40 ஆகவும் உயர்த்திய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலத்தையும், முதியோர், சிறுவர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டண உயர்வை மேற்கொள்ளும் முன், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்தாதது தவறு என கூறியுள்ளார்.

மேலும், திமுகவினர் கடந்த ஜூன் 3ஆம் தேதி இலவசமாக படகில் சென்றதைக் குறிப்பிடும் அவர், பொதுமக்கள், மாணவர்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது அநீதியென தெரிவித்துள்ளார்.
இக்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
