• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Feb 1, 2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பூச நட்சத்திரம் நாள் முழுவதும் நீடிப்பதாலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்த பறவை காவடி, 108 பால்காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி மற்றும் மயில் காவடி எனப் பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து “அரோகரா” கோஷத்துடன் கிரிவலப் பாதையில் வலம் வந்தனர். குறிப்பாக, அந்தரத்தில் தொங்கியபடி வரும் பறவை காவடிகள் பக்தர்களிடையே பெரும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தின

பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் வேறு கேட்டுகள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.