• Sat. Apr 20th, 2024

சென்னையில் பயங்கரம் … காதல் மனைவி கழுத்து அறுத்து கொலை..!

ByA.Tamilselvan

Nov 10, 2022

சென்னையில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மண்ணடி பி.வி.ஐயர் தெருவில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால் (45). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா (39). இன்ஜினீயரான இவர், போரூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன் – மனைவி இருவரும் சென்னை வந்து மண்ணடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இந்நிலையில், பிரியங்கா தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபருடன் பழகுவதையும், செல்போனில் வெகுநேரம் பேசுவதையும் கண்டித்தார். இதனால் பிரியங்கா, கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக சென்று தங்குவதாக கூறி துணிகளை எடுத்துக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் இக்பால், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து பிரியங்காவின் கழுத்தை அறுத்தார்.
வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை தட்டினர். ஆனால், அதற்குள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பிரியங்கா பரிதாபமாக இறந்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிப் இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *