சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாக்கக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லப்பட்டது. இருப்பினும் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் சுனாமி வரக்கூடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியது. 10 முதல் 15 மீட்டருக்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். அத்துடன் மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டதால் நள்ளிரவில் கடற்கரையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வேகவேகமாக கரைக்கு திரும்பினர். இதை தொடர்ந்து சில மணி நேரத்தில் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.