தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள், குழந்தைகளாகவே மாறி பாடம் கற்றுக் கொண்ட நிகழ்வு வியப்பைத் தருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த வகுப்பில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் செயல்பாட்டு முறையுடன் எண்களையும் எழுத்துக்களையும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகள் செயல்முறை வாயிலாக எடுக்கப்பட்டது.
பயிற்சியின் இறுதியில் குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான கையேடு என மொட்டு, மலர், அரும்பு வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனுடன் ஒரு அட்டவணையும் வழங்கப்பட்டது. இது குழந்தைகளின் செயல்பாடு திறன்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கான அட்டவணை ஆகும்.
தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டம் என்பது கொரோனா காலகட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு எண்களையும் எழுத்தையும் மறந்துவிடாமல் ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்வதற்கான ஒரு செயல்முறை பயிற்சியாகும்.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களின் வார்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் செயல்முறை வாயிலாக பாடங்களை கற்றுக் கொடுப்பார்கள். அதற்கான ட்ரெயினிங் வகுப்புகள் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எப்படி செயல்முறையில் கல்வியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை தாங்களே செய்து அதன் மூலமாக குழந்தைகளுக்கும் கற்பிக்கின்றனர். இந்த வகுப்பு ஆசிரியர்களும் குழந்தைகளாகவே மாறி ஆர்வத்துடன் செயல்பாடு முறைக் கல்வியை கற்பிக்கும் முறையை கற்றுக் கொண்டனர்.