• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சுப.உதயகுமாரின் திறந்த மடல்

முனைவர் சுப. உதயகுமார், 42/27, இசங்கை மணி வீதி, பறக்கை சாலை சந்திப்பு,
நாகர்கோவில் 629 002.(கைப்பேசி: 98656 83735)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 009.

அன்பார்ந்த ஐயா:

பொருள்: என் மீதான “தேடப்படும் அறிவிப்பாணை”யை நீக்குவது தொடர்பாக.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக எங்கள் பகுதி பொதுமக்கள் நடத்திய அமைதியான அறவழிப் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக என் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வள்ளியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவோம் என்று நீங்களே உறுதியளித்தீர்கள்.

ஆனால் மேற்படி போராட்டத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 07.11.2013 அன்று C.No.51/X/SB/TIN/2012 எனும் எண் கொண்ட கடிதத்தின் மூலம் சென்னையிலுள்ள முதன்மை குடியேற்ற அதிகாரியிடம் (Chief Immigration Officer) முறையிட்டு என்மீது “தேடப்படும் அறிவிப்பாணை” ஒன்றைப் பெற்றார்.

இந்த அறிவிப்பாணையை நீக்குவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்த பிறகும், இரண்டாவது தீர்ப்பு என் மீது விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் முறைப்படி நிறைவேற்றி, இராதாபுரம் நீதிமன்றத்திடமிருந்து உரிய ஆமோதிப்பைப் பெற்ற பிறகும், தமிழ்நாடு காவல்துறையும், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். தில்லியிலுள்ள உள்துறை அமைச்சக துணை இயக்குனர் ஒருவருக்குப் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்துவிட்டு, பிரச்சினையை இழுத்தடிக்கின்றனர்.

எனவே தாங்கள் தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் தலையிட்டு என் மீது போடப்பட்டிருக்கும் “தேடப்படும் அறிவிப்பாணை”யை நீக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

தங்கள் உண்மையுள்ள, சுப. உதயகுமார்.