• Wed. Apr 24th, 2024

டெல்லி குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக பரதநாட்டியக்குழு..!

Byவிஷா

Jan 23, 2022

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பரதாஞ்சலி என்ற பரதநாட்டியக் குழு தேர்வாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில், நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெறும்.


இந்த நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து, புகழ்பெற்ற நடனக் கலைஞர்-நடன ஆசிரியர், அனிதா குஹாவின் பரதாஞ்சலி நாட்டிய குழு தேசிய மேடையில் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளது. ஜனவரி 19 அன்று புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதித் தேர்வுகளில் பங்கேற்ற 64 நடனப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நடனப் பள்ளிகளில் பரதாஞ்சலியும் இருந்தது என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.


அனிதா குஹாவின் மூத்த மாணவி மற்றும் ஆசிரியை ஸ்மிருதி விஸ்வநாத்தின் தலைமையில் அவரது 10 மாணவர்கள் டெல்லியில் நாள் முழுவதும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெண்கள் அனைவரும் 16 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள். தங்கள் பள்ளி மற்றும் பரதநாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்த இந்த பெண்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அனிதா குஹா ஒரு ஆங்கில செய்தி ஊடகத்திடம் கூறுகையில்,
“திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றின் மூன்று நிமிடப் பகுதியை எனது மாணவர்கள் நிகழ்த்தினர், மேலும் இந்தியா முழுவதும் உள்ள 36 நிறுவனங்கள் மற்றும் நடன பாணிகளுடன் இணைந்து நாங்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது, நேர்மையாக, நான் பொதுவாக எனது மாணவர்களை குழு அடிப்படையிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்பதில்லை, ஆனால் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இது குறிக்கும் என்பதால் நான் இதில் விதிவிலக்கு அளித்தேன், இதை நாங்கள் ஒரு மரியாதையாகக் கருதுகிறோம். நிச்சயமாக என் பெண்கள் முன்னோக்கி செல்வார்கள்” என்று அனிதா குஹா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *