ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்வது போல் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போல் சீருடை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1.25 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது.
இது போல் கஞ்சா சப்ளை செய்வதற்கு தனி நெட்வொர்க்கே இயங்கி வருகிறது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களுக்கும் கூட கஞ்சா விநியோகம் செய்து வருகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.