• Fri. May 3rd, 2024

விறுவிறுப்பாக நடைபெறும் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு..!

Byவிஷா

Jan 6, 2024

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் நடைபெற்று வரும் முதல் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்ததில் இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 2024-ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி இது என்பதால் மக்கள் நேரில் சென்று அந்த போட்டியை கண்டுகளித்து வருகிறார்கள். இந்த போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 297 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் 2-ஆவது சுற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் 160 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ளது.
2-வது சுற்றுகள் முடிவின் அடிப்படையில் இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர். பார்வையாளர் சேவியர் (50) என்பவரை மாடு முதுகில் குத்தியதில்| படுகாயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த 3-வது சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *