பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னர், இரண்டு முறை மயக்க ஊசி செதுத்தி T23 புலி வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. பின்னர் மைசூர் வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் 9 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மைசூர் வன விலங்கு மறு வாழ்வு மையத்தில் உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. காயங்கள் குணமடைந்து வருகிறது. நேற்று அந்த புலி 10 கிலோ மாமிசத்தை சாப்பிட்டுள்ளது. தற்போது டி23 புலி அந்த மையத்தில் உள்ள சிறிய வன பகுதியில் விடபட்டுள்ளது. புலியின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின்னர் தேசிய புலிகள் ஆணையத்தின் ஆணை படி பரிசீலிக்கபட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதா? அல்லது மைசூரிலேயே வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யபடும்” என்றார்.