• Thu. Apr 18th, 2024

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 1000 கோடி வரி எய்ப்பு…

Byகாயத்ரி

Dec 7, 2021

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த நிலையில், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் நான்கு நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள் மற்றும் தி.நகரில் 3 இடங்களில் என பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், அலுவலகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல்வேறு பகுதிகளில் இடங்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு நடைபெற்று வந்திருக்கிறது. 150 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்கப்பட்டுள்ளன.


மேலும், நகைகள் செய்ய கூடுதல் கட்டணம் செலுத்தியதாக சித்தரித்து 80 கோடி ரூபாய் மதிப்பில் போலி பில்களும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த சோதனையின் போது கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கம், 6 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *