சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் அவசரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தீ விபத்தை அடுத்து அரசு மருத்துவமனையில் முதல் மாடியில் இருந்து நோயாளிகள் அவரச அவசரமாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனை என்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இதில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பாஷாலிட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென புகை ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகுந்த பதற்றத்துடன் நோயாளிகளை வெளியேற்றி வருகின்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட புகை காரணமாகவும், மின் கசிவு காரணமாகவும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு, நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டாகவும், அங்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.