சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசின், ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின்(செயில்) கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலை, துர்காபூர் அலாய்ஸ் இரும்பு ஆலை, பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை ஆகிய மூன்றையும் தனியார் மயமாக்கிட பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி,கடந்த 2018ல் ஒப்புதல் அளித்தது.
ஏலம் கேட்டவர்கள் பரிவர்த்தனையை தொடர ஆர்வம் காட்டாததால் கடந்த 2019ல் துர்காபூர் ஆலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்தது. அதை தொடர்ந்து 2022ல் விஸ்வேஸ்ரய்யா ஆலையை விற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. சேலம் இரும்பாலைக்காக, 2019ல் சர்வதேச டெண்டர் விடப்பட்டது. இதில் ஏலம் கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் பரிவர்த்தனையை தொடர அவர்கள் ஆர்வம் காட்டாததால், சேலம் இரும்பாலை விற்பனையை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், பொதுதுறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.51,000 கோடியை திரட்ட அரசு திட்டமிட்டிருந்தது. இதுவரை, ரூ.10,052 கோடி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.