

நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்து, தனது முகப்புப் பக்கத்தை அவர் மாற்றினார். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனால் தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள “அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி” ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
