காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.
வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார். “உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்” என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார்.
இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும். என ராகுல்காந்தி பேசினார்