• Sat. Apr 20th, 2024

மாநிலங்களவை தேர்தல் – திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

ByA.Tamilselvan

Jun 1, 2022

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.ஜூன் 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 24ம் தேதி முதல் இன்று (31ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. அதன்படி, திமுக 3 இடங்களில் போட்டியிடும் என்றும், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு ப.சிதம்பரம் நேற்று மதியம் 12 மணிக்கு மனு தாக்கல் செய்தார். இதுதவிர 5 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை (ஜூன் 1ம் தேதி) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அப்போது, ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதன்படி, 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் நாளை தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. இறுதியாக மொத்தமுள்ள 6 இடத்துக்கு திமுக 3, அதிமுக, 2, காங்கிரஸ் 1 என 6 பேர் மட்டுமே போட்டியில் இருப்பார்கள். வேட்புமனு தாக்கல் இன்று (31ம் தேதி) மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூன் 3ம் தேதி (வெள்ளி) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
இனி, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதையடுத்து, ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன்படி, தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே களத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த 6 பேரும் வெற்றிபெற்றதாக ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *