தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில், எம் ஆர் அப்பன் இல்லம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இதில், கடந்த கால நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் மாநில பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் எழுத்துப் பூர்வமான அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் பி.கிருஷ்ணசாமி மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் க. பால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 17 மாவட்டங்களிலிருந்து மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் மாநில செயற்குழுவில் கலந்துகொண்டு விவாதத்தில் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஆ.சோலையன் நன்றி கூறினார்.
மாநில செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
01.07.2021 முதல் மத்திய அரசு அறிவித்தது போன்று 14 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து அவருடைய ஓய்வூதிய பலன்களை உடன் வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
01.04.2003-க்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்கிட வேண்டும்.
முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பினை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாய் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 5-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்துவது என்றும், அதற்கான ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை 22.11.2021 முதல் 03.12.2021 வரை மாநிலம் முழுவதும் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய திருச்சி மாநில கோரிக்கை மாநாட்டில் விரிவாக விவாதித்து அடுத்த கட்ட இயக்கங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.