• Sat. Apr 27th, 2024

தேனி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு பயிலரங்கம்..!

ByM. Dasaprakash

Nov 24, 2023

தேனி மாவட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்த அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி கூட்டரங்கில், காலநிலை மாற்ற இயக்கம் மற்றும், வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
காலநிலை நெருக்கடி மிகவும் பரவலாகவும் கடுமையாகவும் மாறிவருவதால் காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களை உருவாக்கியுள்ளார்.
இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அனைத்து துறை அலுவலருக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இப்பயிலரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
பூமி வெப்பமடைதல், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் காற்று ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தற்பொழுது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நோயின் தாக்கம் மிக குறைவாக இருந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு, சுற்றுச்சூழக்கும்இ சமூகத்திற்கும் உகந்த வகையில் தங்கள் வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உலக அளவில், மாசுபாட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 35 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் மாசுபாட்டினால் பாதிப்படையும். இதனை தவிர்க்க நாம் அனைவரும் இன்று முதலே மாசுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் நீர்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. மீன்கள், ஆமைகள் போன்றவற்றின் அழிவிற்கு நானோ பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக உள்ளது. பூமியில் உயிரினங்கள் நீடித்து வாழ பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை உபயோகிப்பதை பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *