

பள்ளி இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையை பெற மாணவர்கள் துரிதமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2020 – 2021-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தகுதி பெற்றவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதேநேரம் அரியலூர், கள்ளக்குறிச்சி உட்பட சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல் வழியாக துரிதமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அந்த தகவல்களை எமிஸ் தளத்திலும் பிழையின்றி பதிவுசெய்ய வேண்டும்.
இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால், அது சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
