• Wed. Apr 24th, 2024

தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது

ByA.Tamilselvan

Sep 21, 2022

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய கட்ச் (குஜராத்) பகுதிகளில் இருந்து செப்டம்பர் 17-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கியுள்ளது என்றும் அக்டோபர் 15-ந் தேதிக்குள் முழுமையாக விடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விலகல் கஜுவாலா, பிகானர், ஜோத்பூர், நலியா வழியாக செல்லும். ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 7 சதவீதம் அதிக மழை பெய்தது. ஆனால் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், டெல்லி ஆகிய 8 மாநிலங்களில் மழை பொழிவு இயல்பைவிட குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை விலகல் அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது முதல் முறையாக செப்டம்பர் 3-வது வாரத்தில் பருவமழை விடை பெற தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *