• Thu. Mar 28th, 2024

நாளை தீபாவளி பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

ByA.Tamilselvan

Oct 23, 2022

தீபாவளி பண்டியை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாக மக்களால் கருதப்படுகிறது. மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும். இந்நன்னாளில் தனிமனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தீபாவளித் திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைந்து, இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். நாட்டில் அதர்மம் அழிந்து, தர்மம் நிலைக்க இந்த தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைய வேண்டும்.
வி.கே.சசிகலா
இந்த தீப திருநாளில், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பம் விலகி, இன்ப ஒளி வீசட்டும். வாழ்வில் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீப ஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும். அனைத்து தரப்பு மக்களாலும் ஒளித் திருநாளாய் நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமை, வறுமை, தீமை மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன். சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் தீபாவளியில் தீப ஒளி ஏற்றுவதால் புதுப்பொலிவுடன், நல்வாழ்க்கை வாழ இறைவன் துணை நிற்க வேண்டி அனைவருக்கும் தீபாவளி பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மீக குரு பங்காரு அடிகளார்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *