• Tue. Apr 23rd, 2024

விண்ணை முட்டும் கட்டுமானம்! குருகும் இயற்கை வளம்!

Byகாயத்ரி

Sep 27, 2022

இயற்கையைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான பணியாகும். இயற்கை சூழலில் மனித தாக்கத்தின் தற்போதைய அளவு அதிகரித்து வருகிறது. “சுற்றிலும் முற்றிலும் எங்கு திரும்பினாலும் உயரும் கட்டிடங்கள் தான்”. விண்ணை முட்டும் கட்டிடங்கள் மனித நாகரீகம் என்கிறார்கள்… ஆனால் அதுவே மனிதர்களுக்கு பாதகம் என்பதை அறியாமல் நிலத்தை சுரண்டி வருகின்றனர். இயற்கை நிலத்தை அழித்து உயர்ந்து வரும் கட்டிடங்கள் தான் தற்போது அதிகம்.

இயற்கை வளத்தை இடையறாது மனிதன் அழித்து வருவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், குடிநீரும் பற்றாக்குறையாக இருக்கும் இழிநிலை ஏற்பட்டுள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், நம்மை நோய்களிலிருந்து காக்கும் அரிய வகை மூலிகைகளும், உயிர் வாழ இன்றியமையாத நீரும், தாவர வளமும் விலங்கு வளமும் இல்லாமல் இருக்காது. ஆகமொத்தம் ஒன்றை ஒன்று சார்ந்த தாவர மற்றும் விலங்கு வளம் காக்கப்பட வேண்டியது சுற்றுப்புறச் சூழலின் சமச்சீர்த்தன்மைக்கு இன்றியமையாதது. பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதற்கான முக்கிய காரணம் “வேட்டையாடுதல், சீதோஷ்ண நிலை மாறுதல், உலகம் வெப்பமயமாதல், விஷ வாயுக்கள் மற்றும் அபாயகரமான நச்சுப் பொருள்கள், முக்கிய கூற்றாக கட்டுமானம்”, இது இல்லாமல் இதர பல காரணங்களும் உண்டு.

மிருகம் மற்றும் தாவர வகைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். இதனை தடுக்கவே “பசுமை இயக்கம்” அரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் அங்கமாக புதிதாகக் கட்டப்படும் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் பசுமைக் கட்டிடங்களாக அமைக்கப்பட வேண்டும். அதாவது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாவண்ணமும், தூய நீர் தூய காற்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமலும் ஆற்றலைச் சேமிக்கும் விதத்திலும் இவை அமைக்கப்படுவதே இதன் நோக்கம். காற்று நீர், ஆற்றல் இவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு இவற்றை அனாவசியமாக வீணாக்காமல் பாதுகாக்கும் நடைமுறைகளை பசுமைக் கட்டிடக் கலை கொண்டுள்ளது. வானளாவ உயரும் கட்டிடங்கள் ஒரு புறம் இருக்க அருகில் திறந்தவெளியாக நிலப்பரப்பு அதிகம் உருவாக்கப்படுவதும் இதன் ஒரு அம்சம் தான்! இப்படிப்பட்ட பசுமைப் புரட்சியில் அனைவரும் பங்கு பெற்று, தங்களால் முடிந்தவரை இயற்கை ஆதாரங்களை வீணாக்காமல் பாதுகாக்க முயற்ச்சிப்போம். தேவையற்றபோதெல்லாம் விளக்குகளை அணைப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, குழாயைத் திறந்து விட்டு வேலைகளைச் செய்யாமல் அளவோடு நீரைப் பயன்படுத்துவது,காம்பாக்ட் ப்ளோரஸண்ட் பல்புகளை வாங்கி வீட்டில் பொருத்துவது, நாம் அன்றாடம் வாங்கிப் படிக்கும் செய்தித் தாள்களை மறுசுழற்சிக்கு உரிய முறையில் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான எளிய பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் இயற்கையின் ஆற்றல் சேமிப்பு அதிகமாகும்; ஆதார வளங்கள் வீணாவது குறைவாகும்!

“இன்றே பசுமை கட்டிட திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நமக்கு பின் வரும் சந்ததியினர் பெருமளவு ஆற்றலுடன் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம்”..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *