தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 28 நாட்களாக இறப்பு இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ,சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் ,தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 24 மணி நேர தடுப்பூசி மையம் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்முரளிதரன் கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டீன் பாலாஜி நாதன் கூறியதாவது ,கொரோனா பாதிப்பின் மூன்றாவது அலை வரக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் ஒருவேளை அதனுடைய தாக்கம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும். கோவாக்சின் ,கோவிஷீல்டு உள்ளிட்ட இரண்டு வகையான தடுப்பூசிகளையும், 24 மணி நேரத்தில் அவரவர் வசதிப்படி ஆதார் கார்டை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இங்கு சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.
ஊசி செலுத்தி கொள்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் இரண்டு தொலைபேசி எண்களை பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதன்படி 94 86 32 16 70 மற்றும் 944 344 73 69 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் மருத்துவமனை டீன் தெரிவித்தார். இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாகவும்,கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டத்தை உருவாக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பேட்டியின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆர். எம். ஓ. ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.