• Mon. Mar 24th, 2025

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

ByKalamegam Viswanathan

Mar 4, 2025

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜ்குமார், ஜெயகுமார், சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தில் ஆய்வு பணி மேற்கொண்டதில் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் மணி ஸ்டோர் என்ற மளிகை கடையை நடத்திவரும் ரா. சுகுமாரன் M/64, த/பெ.ராஜசேகர், என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் கூல்லிப் போன்ற புகையிலை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கும், எதிரே உள்ள பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து விற்பனை செய்து வருவது கண்டறிப்பட்டது. மேலும், இதற்கு முன்பாக இரண்டு முறை தடை செய்யப்பட்ட குட்கா விற்ற குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார். முதல்முறை குற்றத்திற்காக ரூ. 25,000/-ம் அபராதமும் மற்றும் 15-நாள் கடையை பூட்டி சீல் செய்யப்பட்டது. இரண்டாவதுமுறை குற்றத்திற்காக ரூ.50,000/-ம் 30 நாள் கடையை பூட்டி சீல் செய்யப்பட்டது. தற்பொழுது மூன்றாவது முறையாக குட்கா, பான் மசாலா இருப்பு வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது அபராதமாக ரூ. 1,00,000/- மூன்று மாதம் கடையை சீல் செய்து அடைக்கப்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருடன் இணைந்து சோழவந்தான் பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பழங்கள் வியாபாரம் செய்யும் கடைகள், பிராய்லர் கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. AP Broiler கடைக்கு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்தியதற்கு ரூ.2,000/-ம், தென்கரை சோழா குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததிற்காக ரூ. 1,000/- அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.