விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்.
விதிமுறைகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. சுங்கச்சாவடியை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களும் நடந்தப்பட்டது.
4 வழிச்சாலையை பயன்படுத்தாத டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் போராட்டம் நடத்தும் போது அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதும், பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூலிப்போம் என கூறுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது
இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராக திருமங்கலம் நகர்பகுதி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.