ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் பொதுமக்கள் வசிக்கும் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டையில் முஸ்லிம் தெருவில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய ரேஷன் கடை கட்டிடம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் சிமெண்ட் பூச்சிகள் விழுந்து அடைத்ததால் கழிவுநீர் அங்கிருந்து வெளியேறி நங்காஞ்சி ஆற்றுக்கு செல்லாமல் இன்று (செவ்வாய்க்கிழமை) தெருவில் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் புதூர் கிராமத்திற்கு செல்லும் பொதுமக்களும் இந்த வழியாக நடந்து சென்று வருகின்றனர்.
தினந்தோறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சி மன்ற நிர்வாகம் கழிவுநீரை சாலையில் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




