கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள்தான் பல பெரிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட்டு வந்தன.
இதனால் திரையரங்குகளின் ரசிகர்களை போன்றே ஓடிடி-யில் வெளியாகும்திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக, தயாரிப்பாளர்களுக்கு புதிய வருவாய் தளமாக ஓடிடி இன்று வளர்ந்திருக்கிறது.
ஓடிடி-யை நம்பி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் வட்டி வசூலிப்பதாக பிரபல சினிமா இயக்குநரான சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “திரைப்படங்களை சொன்ன தேதியைவிட சற்றுத் தள்ளி வேறு தேதியில் வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்..” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.