நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட கட்சிகளுடன் போராடுவதை விட விஜய் மக்கள் இயக்கத்தினருடன் போராடுவது நாம் தமிழர் தமிழர் கட்சியினருக்கு வேலையாக வந்து விட்டது. இந்த நிலையில் விஜய்யை வம்புக்கு இழுத்துள்ள சீமான் கோட்பாட்டு அளவில் அவரும் நானும் வேறு வேறு என தெரிவித்துள்ளார். மேலும் விஜய்க்கு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கு முன் நடந்த தேர்தலில் சுமார் 115 இடங்களை விஜய் மக்கள் இயக்கம் வென்றது. முழுநேர அரசியல் செய்யும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கூட இத்தனை இடங்கள் கிடைக்கவில்லை. விமர்சகர்களும் விஜய் மக்கள் இயக்கத்துக்கு கிடைத்த வெற்றியை வைத்தே நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் விமர்சித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது பேசிய அவர், விஜய் என்னுடைய தம்பி தான். ஆனால் கோட்பாட்டுரீதியில் நாங்கள் இருவரும் வேறு வேறு. என்னுடைய தலைவர் பிரபாகரன். அவரை பற்றி விஜய் இதுவரை ஏதாவது பேசியிருக்கிறாரா? ஆற்று மணல் எடுப்பதையோ, குளிர்பான நிறுவனங்கள் நீரை உறிஞ்சுவதையோ கண்டித்து இருக்கிறாரா? அவருடைய கோட்பாடு என்னவென்று தெரியாமல் அவர் எனக்கு போட்டி என்று எப்படி கேட்கிறீர்கள் என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தது போல் இனி எந்த நடிகரும் வெல்ல முடியாது என சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரை உதாரணமாக சுட்டிக் காட்டினார். கமல்ஹாசன் 5 வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரையே மக்கள் அங்கீகரிக்கவில்லை. ரஜினிகாந்தும் அரசியலில் இருந்து விலகி விட்டர். தம்பி விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவர் என்ன கொள்கை கோட்பாட்டை முன்வைக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில்லை அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு துண்டு அறிக்கை கூட விடவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் பல இடங்களில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் முழுநேர அரசியல் கட்சியான நாம் தமிழரால் விஜய் மக்கள் இயக்கம் பெறும் வெற்றியைக்கூட பெற முடியவில்லை. சொந்த தொகுதியில் கூட செல்வாக்கு இல்லாத கட்சியாக நாம் தமிழர் கட்சி இருப்பதாகவும் இந்த இரண்டையும் ஒப்பிட்டு விமர்சகர்கள் கேள்விகள் வைப்பதால் சீமான் கோப்படுவதாக கூறப்படுகிறது.