• Thu. Apr 25th, 2024

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது
டி20 போட்டியில் இலங்கை வெற்றி

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். இதனால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. இருந்தபோதிலும் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதேபோல் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர். ஆனால், கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில், அடித்து ஆட முற்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் கடைசி பந்தில் ஷிவம் மவியும் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் இந்தியா 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டி 7ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் கடைசி போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *