தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதற்கு பிறகு மழை காரணமாக பள்ளிகள் இடையில் மூடப்பட்டன. பின்னர் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதற்கு பிறகு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் 6193 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 1758 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 4726 மெட்ரிக் பள்ளிகள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. இவற்றில் படிக்கும் சுமார் 1 கோடியே 10 லட்சம் மாணவ மாணவியர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிவித்த சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.