சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – இருவரையும் காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதோடு, உயிரழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாகவும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியம் சொல்லியுள்ளார். தற்போது டிசம்பர் 21ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன் சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் – பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாகவும், உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய்வழக்கையும் பதிவு செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரையும் துன்புறுத்தியதாக தலைமை காவலர் ரேவதியை தொடர்ந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளரும் தநிதி மகன் இருவரையும் துன்புறுத்தியதாக சாட்சியம் அளித்துள்ளது வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் 5 காவலர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்போது குலசேகரபட்டிணம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
21ஆம் தேதியன்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், மற்ற 3 பேரின் வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் , அரசு மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.