நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது அதிமுகவின் தலைமையை கைப்பற்ற சசிகலாவிற்கு துணிச்சலும், தைரியமும் இல்லை என்றே தோன்றுகிறது. தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், மழை மற்றும் நிவாரணம் வழங்கும் காரணங்களுக்காக உள்ளாட்சிதேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. எப்பொழுது தேர்தல் வந்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று உறுதி கூறிய கார்த்தி சிதம்பரம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வலுவான தலைமை இல்லாததே அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேற காரணம் என்றும் கூறினார். தொண்டர்களாலும், இயக்கத்தாலும் தேர்தெடுக்கப்படாமல் சரித்திர விபத்தால் தலைமைக்கு வந்தவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் என்றும், அதிமுகவின் வாக்கு வங்கியையும், அதன் தொண்டர்களையும் நான் மதிக்கின்றேன். ஆனால் தற்போதுள்ள தலைமையால் அதனை காப்பாற்ற முடியாது என்றும் கூறினார்.
தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி பாஜக என்றவர், இந்து, இந்துத்துவா கொள்கையை மாற்றிக் கொண்டு வந்தால் பாஜகவுக்கு ஏதாவது ஒரு வரவேற்பு தமிழகத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.