• Sat. May 17th, 2025

பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை..,

BySeenu

Apr 30, 2025

கோவை ஒண்டிப்புதூர் அருகே செயல்பட்டு வரும் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை செய்ததாக வந்த புகாரை அடுத்து பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

அங்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்லும் நிலையில் இன்று காலை 8:00 மணி முதல் அங்கு பெட்ரோல் நிரப்பிய நூற்றுக்கணக்கான வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளன.

இதை அடுத்து வாகன உரிமையாளர்கள் உடனடியாக பெட்ரோல் பங்கிற்கு வந்து முறையிட்டுள்ளனர் மேலும் சிலர் ஆங்காங்கே இருந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் மையங்களுக்கு சென்று சோதனை இட்ட நிலையில் பெட்ரோலில் அதிகளவு எத்தனை கலந்திருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் நிரப்பிய பெட்ரோலை குடுவையில் கொண்டு வந்து பெட்ரோல் பங்கில் முறையிடவே உடனடியாக அந்த பெட்ரோல் பங்கை மூடிய பங்க் நிர்வாகத்தினர் இது தொடர்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர்

அதன் பேரில் அங்கு வந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன தொழில்நுட்ப அதிகாரிகள் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல் தொட்டியில் இருந்து அனைத்து பெட்ரோலையும் வெளியில் எடுத்து தற்போது சோதனையிட்டு வருகின்றனர்

இதேபோல் தமிழ்நாடு கூட்டுறவு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனிடையே அந்த பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் நிரப்பி பழுதான வாகனங்களுக்கான உரிய இழப்பீடு கூறியவர்களுக்கு பெட்ரோல் பங்க் சார்பில் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

வழக்கமாக இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து வரும் பெட்ரோலை அப்படியே தங்கள் பங்கில் உள்ள தொட்டியில் நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் இதுவரை இது போன்ற ஒரு புகார் தங்களுக்கு வந்ததில்லை எனவும் தெரிவித்த அதிகாரிகள் தற்பொழுது ஆய்வு செய்த அதிகாரிகள் எத்தனால் அதிகளவில் கலந்துள்ளதாகவும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஒண்டிப்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.