ரஷிய விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோதனை ரீதியில் ‘டெலிடிராய்டு’ ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. ‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கான நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி துபாயில் நடந்து வருகிற சர்வதேச விண்வெளி மாநாட்டின் போது ரஷிய விண்வெளி பயிற்சி மைய செய்தி தொடர்பாளர் கூறும்போது, விண்வெளியில் மனிதர்களுக்கு முற்றிலும் ஒரு மாற்றாக ‘ரோபோ’க்கள் இருக்காது. ஆனால் அவை மண்ணை சேகரிப்பது, துளையிடுவது போன்ற சில செயல்களை செய்து முடிக்கிற திறனைப் பெற்றுள்ளன. மேலும், மனிதர்கள் மிக நீண்ட காலம் இருக்க முடியாது என்ற நிலையில் ‘ரோபோ’ மாடலை முழுமையாக மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. புதிய ‘ரோபோ’க்கள் அனேகமாக 2024-ம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் சுற்றுப்பாதையில் பறக்கும் என அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், ரஷிய விண்வெளி பயிற்சி மையம், மானுடவியல் ‘ரோபோ’க்களை கட்டுப்படுத்துவதற்கு மனிதர்களை தயார்படுத்துவதற்கான உபகரணத்தை காட்சிப்படுத்தியது.