• Sat. Apr 27th, 2024

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அட்டூழியம்… கண்ணீர்விடும் மாணவிகள்

கர்நாடகாவில் சமீப நாட்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் தடுத்து வருகிறது. ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த புதிய கட்டுப்பாடு கல்லூரிகளில் விதிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மங்களூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணிந்து வர கூடாது, இல்லையென்றால் நாங்கள் இதேபோல் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிய, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதையடுத்து கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய வரிசையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடுப்பியில் இருக்கும் ஒரு அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் “ஆப்சென்ட்” என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது.

இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பியூ கல்லூரி மட்டுமின்றி யுஜி, பிஜி கல்லூரிகளிலும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் சிவமொக்காவில் இருக்கும் Sir MV Arts and Commerce கல்லூரியில் இதேபோல் இந்து மாணவர்களின் போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது உடுப்பியில் உள்ள குண்டபுரா அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நுழைய தடை விதைக்கப்பட்டுள்ளது.

அங்கு இஸ்லாமிய மாணவிகள் 46 பேர் ஹிஜாப் அணிந்து வந்து இருக்கின்றன. இந்த விஷயத்தில் போராட்டம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குண்டபூர் பாஜக எம்எல்ஏ ஹலடி ஸ்ரீனிவாஸ் அங்கு இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். உங்கள் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணியால் கல்லூரிக்கு அனுப்புங்கள் என்று கூறி இருக்கிறார். இதற்கு இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர் மறுத்துள்ளனர். ஆனால் எம்எல்ஏ தரப்பு இந்து மாணவர்களை கண்டிக்கவில்லை.

இதையடுத்து தற்போது இஸ்லாமிய மாணவிகளுக்கு பள்ளிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இன்று அந்த மாணவிகள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் தலைமை ஆசிரியருடன் மாணவிகள் உருக்கமாக பேசி உள்ளனர். சார் எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது.. ப்ளீஸ் எங்களை கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாட்கள் நாங்கள் வந்த போது பிரச்சனை இல்லையே. எக்ஸாம் எழுத ரெண்டு மாசம்தான் இருக்கு. எங்கள் எதிர்காலத்தை கெடுக்க வேண்டாம் என்று மாணவிகள் கண்ணீர்விடப்படி அழுது இருக்கிறார்கள்.

ஆனால் மாணவிகள் கண்ணீர்விட்டு அழுத போதும் அதை கேட்காமல் அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் கல்லூரியின் கதவை பூட்டி இருக்கிறார். மாணவிகள் இப்படி கண்ணீர்விட்டு அழுத சம்பவம் இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது. மாணவிகள் கண்ணீர்விடும் காட்சிகள் இணையத்தை உலுக்கி உள்ளது. கர்நாடக பியூ கல்லூரிகளில் நடக்கும் இந்த புதிய கட்டுப்பாடு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அம்மாநில கல்வித்துறை இதுவரை இந்த சர்ச்சையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *